துண்டான சிறுவனின் கையை இணைத்து சேலம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சேலம், ஐந்து ரோடு கந்தம்பட்டி புறநகர்ப் பகுதியில் வசித்துவருபவர் ராமன். இவரது மகன் மௌலீஸ்வரன் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அருகிலுள்ள பஞ்சர் கடையில், காற்று நிரப்பும் பம்ப் வெடித்ததில் ஒரு இரும்புத் துண்டு பறந்துவந்து மௌலீஸ்வரனின் கையில் விழ அவனது கை மணிக்கடுப் பகுதியோடு துண்டானது.
உடனே பெற்றோர், அக்கம் பக்கம் வசிப்பவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் கொடுக்க சேலம் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். விரைவாக செயல்பட்ட மருத்துவர்கள் 11 மணி நேரம் போராடி சிறுவனின் கையை இணைத்தனர். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான். இன்னும் ஒரு மாத காலத்தில் அவனது கை வழக்கம்போல் செயல்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அரசு மருத்துவர் ராஜேந்திரன், “சம்பவம் 9 மணிக்கு நடைபெற்றுள்ளது. 9.30 மணிக்கு இங்கே அழைத்து வரப்பட்டான். வருவது குறித்து முன்கூட்டியே தகவல் சொல்லப்பட்டதால் நாங்கள் தயாராக இருந்தோம். அவனுக்கு உடனடியாக இரத்தம் ஏற்றப்பட்டது. துண்டான சிறுவனின் கையை புத்திசாலித்தனமாக பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அதை ஐஸ் கட்டிகள் கொண்டு மீண்டும் சுற்றி பத்திரமாக எடுத்துவந்ததால் கையை இணைக்க முடிந்தது. 11 மணி நேரமாக போராடி அவனது கையை இணைத்தோம் ” என்று அந்த பரபரப்பான நிமிடங்களை பகிர்ந்துள்ளார்.